தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை'
சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை
சிவலிங்கம் சிவகுமாரன்
தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா இலங்கை முஸ்லிம் பெண் படைப்பாளிகளில் வளர்ந்து வரும் அதே நேரம் அறியப்பட்ட ஒருவராக விளங்குகிறார். இவரது முதலாவது சிறுகதை தொகுதியாக வைகறை என்ற படைப்பு வெளிவந்துள்ளது. இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 21 சிறுகதைகள் அடங்கியுள்ளன.
ரிஸ்னாவின் படைப்புகளை பார்க்கும் போது ஒரு விடயத்தை முன்னிறுத்தலாம், பெண் படைப்பாளிகளில் குறிப்பாக முஸ்லிம் பெண்படைப்பாளிகள் சமூக கட்டுக்கோப்புக்குள் வாழ வேண்டும்,கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதால் அதே கட்டுக்கோப்போடு தான் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்பதே அது. காரணம் சமூக சீர்கேடுகள், வறுமை, அதிகாரப்போக்கு, ஆணவம், கர்வம், ஏமாற்றுதல், வஞ்சம் போன்றவற்றை இவரது கதைகளில் பாத்திரங்களாக நடமாட விட்டு விளைவுகளை தண்டனைகளாக தந்திருக்கிறார். சிறு கதையானது அத்தளத்திலிருந்து சற்று வெளியே சென்று மீண்டும் கதைக்கு திரும்பும் பாணியை இப்போது எவரும் பின்பற்றுவதில்லை என்றே கூற வேண்டியுள்ளது. அதாவது கதைக்கு இடையே படைப்பாளி தரும் தத்துவங்கள்,வர்ணணைகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
ரிஸ்னாவின் கதைகளில் தேவையில்லாத அலட்டல்கள் இல்லை என்பதால் வாசிப்போருக்கு இலகுவாகவும் விரைவாகவும் வாசிக்க முடிகிறது. நடை மிகவும் இலகுவானது. விதி,கானல் நீர்,வாக்குறுதிகள்,கண்ணீர் போன்ற சிறுகதைகள் மனதை தொடுகின்றன. மலையகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ரிஸ்னா தற்போது தலைநகரில் வாழ்ந்து வருகிறார். எனினும் இவரை மலையக பெண் படைப்பாளிகளில் ஓருவராக பெயரிடவே எனது மனம் விரும்புகிறது. அவரது இலக்கிய பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர்: வைகறை (சிறுகதை தொகுதி)
நூலாசிரியர்: தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா
வெளியீடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
No comments:
Post a Comment